மீனவர்கள் வலையில் சிக்கிய பெரிய கடல் பாம்பு !

1 minute read
ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2500 மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர். கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை பலவகை மீன்களுடன் கரை திரும்பினார்கள்.
 
இதில் சேசுராஜா என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் சென்ற மீனவர்களின் வலையில் 11 அடி நீளமும் 15 கிலோ எடையும் கொண்ட அரிய வகை கடல் அஞ்சாலை மீன் என்று சொல்லக் கூடிய கடல் பாம்பு பிடிபட்டு இருந்தது.

அதை விலாங்கு மீன் என்று நினைத்து மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அது விலாங்கு மீன் அல்ல. கொடிய விஷத்தன்மை கொண்ட கடல் பாம்பு என தெரியவந்தது.

துறைமுக கடற்கரையில் 3 மீனவர்கள் சேர்ந்து அந்த கடல் பாம்பை கரைக்கு தூக்கிக் கொண்டு வந்தனர். இதை மற்ற மீனவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

இதுபற்றி படகு உரிமையாளர் சேசுராஜா கூறுகையில், ‘கடல் அஞ்சாலை மீன் என்று சொல்லக் கூடிய கடல் பாம்பு 3 அடியில் இருந்து 5 அடி வரையில் தான் வலையில் சிக்கும்.

ஆனால் தற்போது 11 அடி நீளம், 15 கிலோ எடை கொண்ட கடல் பாம்பு சிக்கியது ஆச்சரியமாக உள்ளது. இந்த கடல் பாம்பு கடித்தால் உயிர் பிழைப்பது கஷ்டம் தான். வலையில் கடல் பாம்பு சிக்கினால் கடலிலேயே விட்டு விடுவோம்.

மீனவர்கள் விலாங்கு மீன் என்று நினைத்து தெரியாமல் கரைக்கு கொண்டு வந்து விட்டனர். கடல் பாம்பை கரைக்கு கொண்டு வந்தாலும் இதை கரையில் வீசி விடுவோம். இதனால் ஒரு பயனும் கிடையாது. இந்த பாம்பை வெட்டி வெளியூர்களுக்கு அனுப்பவும் மாட்டோம்’ என்றார்.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings